Search This Blog

Showing posts with label chicken. Show all posts
Showing posts with label chicken. Show all posts

Wednesday, January 27, 2016

அசைவ உணவுகளும் - பலன்களும்

ப்போது ‘அசைவம் நல்லதா, கெட்டதா?’ என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில்  பட்டையைக் கிளப்புகிறது அந்த விவாதத்துக்குள் போவதற்கு முன் மிக முக்கியமாக ஒரு விஷயத்தை மனதில் பதிந்துகொள்ளுங்கள். இப்போதைய சுத்த சைவர்களின் பாட்டன், முப்பாட்டன், முந்தைய தலைமுறையினர் எல்லாம் காடைக் கறி, கவுதாரி ரத்தம், சுறாப் புட்டு சாப்பிட்டுத்தான் பரம்பரையை நீட்சியடையவைத்தனர். பண்டைய தமிழரும் சரி தமிழ்ச் சித்தர்களில் பலரும் சரி புலால் உணவை விருந்தாக மருந்தாகப் போற்றியிருக்கின்றனர். 

ஆடு, ஆமை, மூஞ்சுறு, முதலை வரை நாம் யூகிக்க முடியாத உயிரினங்களை எல்லாவற்றையும் பிடித்து நம் முன்னோர்கள் சாப்பிட்டு வெளுத்துக்கட்டியிருக்கின்றனர்.  புலால் உணவின் புரட்டப்படாத பக்கங்கள் நம் வரலாற்றில் ஏராளம். ‘ஈசலைக்கூட சீனாக்காரன் விட்டுவைக்க மாட்டான். வறுத்துத் தின்றுவிடுவான்’ என நம்மவர்கள் கேலியாகச் சொல்வார்கள். ஆனால், 
‘செம்புற்று ஈயலின் இன் அலைப் புளித்து மெந்தினை யாணர்த்து நந்துக் கொல்லோ’ 
என்ற சங்க இலக்கியப் பாடல் வரிகள் நம் முன்னோர்கள் ‘ஈசல் ஊத்தப்பம்’ சாப்பிட்டார்கள் என்பதை உணர்த்துகிறது என அவர்களுக்குத் தெரியாது.

காடை 
மருந்துகள் தராத ஊட்டம் சில புலால் விருந்து தரும். காடை இறைச்சி எனும் QUAIL FLESH அப்படியானது. 
‘கட்டில் கிடப்பார்க்கு காட்டில் படும்காடை’ 
என காடை இறைச்சியின் அருமை பெருமைகளை அடுக்குகிறது சித்த மருத்துவப் பாடல் ஒன்று. ஆஸ்துமா, அல்சர் போன்ற நோய்களைப் போக்குவதுடன் வற்றலாக சோகை பிடித்திருக்கும் நபர் காடைச்சோறு சாப்பிட்டால் கட்டழகன் ஆவான் என்கிறது நம் பண்டைய தமிழ் நூல்கள்.

‘கால் ஆடு, அரை முயல், முக்கால் உடும்பு, முழு காடை' என, ஒரு பிரபல சொலவடை காடையின் பெருமையைச் சிலாகிக்கிறது. அதாவது ஒரு காடை என்பது, ஆட்டு இறைச்சி சத்தின் கால் பங்கும் முயல் இறைச்சியில் அரைப் பங்கும், உடும்பில் முக்கால் பங்கும் கொண்டதாம். காடை முட்டைக்கு, கோழி முட்டையைவிட மூன்று முதல் நான்கு மடங்கு சத்து அதிகம். மூளைக்கு அவசியமான சத்தில் தொடங்கி, விட்டமின் பி1, பி12 என அத்தனை சத்திலும் கோழியை விஞ்சுமாம் காடை.

ஆடு
வெள்ளாடும் வரையாடும் கூட  நம் முன்னோர்கள்  சாப்பிட்டவை. ‘உள்ளாடும் நோயெல்லாம் ஓட வைக்கும்’ எனப் பாடப்பட்ட வெள்ளாட்டுப் புலாலை,  பிற உணவுகளை மருந்துக்குப் பத்தியமாக ஒதுக்கிவைக்கவேண்டிய நோய் தருணங்களிலும்கூட, சாப்பிடக்கூடிய உணவாக குறிப்பிட்டிருக்கின்றனர்.

குறிப்பாக, விட்டமின் பி12, அதிகப் புரதம், இரும்புச்சத்து என அத்தனையும் தரும் இந்த இறைச்சி. வெள்ளாட்டு ஈரல், இரும்புச்சத்து குறைவாக உள்ளோருக்கு அத்தியாவசியம். இரும்புச்சத்தை உட்கிரகிக்கத் தேவையான ஃபோலிக் அமிலமும், பி12 உயிர்ச்சத்தும் வெள்ளாட்டு ஈரலில்தான், பிற எந்த உணவைக் காட்டிலும் மிக அதிகம்
.
மீன்
நம் உடல் தானே உற்பத்தி செய்துகொள்ள முடியாத அமினோ அமிலங்கள் சிலவற்றை மீன்கள்தான். ஏகப்பட்ட புரதங்களோடு கூடவே அயோடின் முதலான தாது கனிமங்களையும் சேர்த்துத் தருபவை மீன்கள். தசைக்கு புரதம், எலும்புக்கு கால்சியம், மூளைக்கு ஒமேகா-3, ரத்தத்துக்கு இரும்பு, இதயத்துக்கு சோடியம், பொட்டாசியம் என உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஊட்டச்சத்து தருவது மீன்கள் 

நீர் தேங்கி நிற்கும் குளம், கிணறு முதலான நீர்நிலை மீன்களைவிட, நீர் ஓடிக்கொண்டே இருக்கும் ஆறு, கடலில் உலாத்தும் மீன்களைத்தான் பழந்தமிழ் இலக்கியங்கள் பந்திக்குப் பரிந்துரைக்கின்றன. ஏரி மீன் மட்டும் இதில் விதிவிலக்கு. 

சுறாப் புட்டு, பிரசவித்தத் தாய்க்கு பால் ஊறச் செய்யும், விரால் மீனின் தலைக் கல், கண்களில் விழும் பூவை நீக்கும், குறவை மீன் மூட்டுவலி போக்கும் இயல்பு நிரம்பியது என்கிறது சித்த மருத்துவம். ஆற்று மீன்களில் விராலையும் கடல் மீன்களில் வஞ்சிரத்தையும் சிறப்பாகச் சொல்கின்றன பழந்தமிழ் இலக்கியங்கள். அரை முதல் முக்கால் மீட்டர் நீளத்துக்கு வளர்ந்த வஞ்சிரம் மீனில்தான் சுவையும் சத்தும் அதிகம் .

கண் நோயில் இருந்து புற்றுநோய் வரை தடுக்கும் அந்த எண்ணெய், நெடுநாளாக வதைக்கும் மூட்டு வலி, திரும்பத் திரும்ப வரும் சிறுநீரகக் கற்கள் நோய்க்கும்கூட நல்லது.


கோழி அல்லது மட்டன் ஆகிய இரண்டையும் நேரடியாக, இறைச்சிக் கடையில் இருந்து புதிதாகப் பெறுவதுதான் உத்தமம். ஃப்ரீஸரில் வைத்திருப்பதில் தொற்று நுண்கிருமிகள் இருக்க வாய்ப்புகள் அதிகம். அதுவும் இறைச்சியை நன்கு கழுவுவதால்கூட அந்தக் கிருமிகள் போகாது. சமையல் கொதிநிலையில் வேகும்போதுதான் கிருமி நீங்கும்.

கோழியாக இருந்தால் குறைந்தபட்சம், 165 டிகிரியைத் தாண்டி வேகவைப்பது மிகமிக அவசியம். பிற இறைச்சிக்கு இந்த உஷ்ணநிலை இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்.

தும்மல், இருமல், வியர்வை என பல வழிகளில் கிருமிகள், இறைச்சி வெட்டும் நபரிடம் இருந்து இறைச்சிக்கு வரலாம். அவை சரியாக வேகவைக்கப்படாதபோது, கிருமிகள் வளர வாய்ப்பு தரும். ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் கிருமியின் அளவு இரட்டிப்பு ஆகும். அந்தக் கிருமிகள் வளர ஏதுவான 37 டிகிரி வெப்பநிலை உடலுக்குள் நிலவுவதுதான் காரணம் என்கிறார்கள்.


நன்றி: மருத்துவர்.கு.சிவராமன்
Related Posts Plugin for WordPress, Blogger...