Search This Blog

Saturday, March 17, 2012

கோடை- ஆடை


கோடைக்கும் நாம் அணியும் ஆடைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சில வகை ஆடைகளை நாம் கோடையில் தேர்ந்தெடுத்து அணிவதின் மூலம் வெப்பத்தினால் ஏற்படும் தீங்கிலிருந்து தப்பிக்கலாம்.
இறுக்கமான ஆடைகள்: கோடையில் இறுக்கமான பேண்ட், உள்ளாடைகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இறுக்கமான உடைகள் காற்றோட்டத்தை முழுவதுமாக தடைசெய்துவிடும்; வியர்வை எளிதில் ஆவியாக வாய்ப்பில்லை. இதனால் உடலில் உப்பு படிந்து, அரிப்பு ஏற்படும். கோடைக்காலத்தில் ஜீன்ஸ் போன்ற உடைகளைத் தவிர்க்க வேண்டும்.
செயற்கை இழை ஆடைகள்: பாலிஸ்டர் போன்ற செயற்கை இழை ஆடைகள் நமது உடலுக்கு ஏற்றதல்ல. இவ்வகை ஆடைகள் எளிதில் சூடாவதுடன், நமது தோலையும் சூடாக்கிவிடும். இதனால் தோலின் நிறம் மாறுவதும், ஒவ்வாமையும் ஏற்படும்.
கெட்டியான நிற ஆடைகள்: ஆடைகளின் நிறத்தையும் கவனிக்க வேண்டும். காரணம் சிவப்பு, கருப்பு மற்றும் கெட்டியான பச்சை போன்ற நிறங்கள் கோடையில் மேலும் வெம்மையை கூட்டுகின்றன. இந்நிறங்கள் சூரிய ஒளியின் உக்கிரத்தைக்கூட்டி கண்களை உறுத்தும். அதிக ஒளியில் கண்களை உறுத்துவதால் கண் தசைகள் எளிதில் களைப்படையும். பெரிய டிசைன் போட்ட ஆடைகளையும் தவிர்த்தல் நல்லது. வெண்ணிற ஆடைகளும், சிறிய டிசைன் போட்ட ஆடைகளும் சரியான தேர்வு.
ஆபரணங்கள்: அதிக ஆபரணங்களை உடலுக்கு நெருக்கமாக அணிவதால் வேர்வை ஆவியாகாமல் அரிப்பு ஏற்பட்டு நோய்கள் வர ஏதுவாகிவிடும்.
கைப்பைகள், செருப்புகள்: கெட்டியான கண்களை உறுத்தும் நிறங்களைக் கொண்ட கைப்பைகள், பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்த்தல் மிக நல்லது. பிளாஸ்டிக் செருப்புகள் வெயில் காலங்களில் விரைவாகச் சூடாகி, தோலின் மென்மையைப் பாதிக்கும். தோல், ரப்பர் செருப்புகளே சிறந்தது. குழந்தைகளுக்கும் வெண்மையான ஆடைகளே சிறந்தது. குழந்தைகளின் மென்மையான தோலுக்கு தளர்வான உடைகள் மற்றும் பருத்தியிலான சாக்ஸ், கையுறைகளைப் பயன்படுத்துதல் சிறந்தது. 

Source: Dinamani

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...