Search This Blog

Saturday, October 31, 2015

தமிழ்ச் சிற்றிதழ்களும் இணையமும்

ஒரு காலத்தில் இணையத்தளம் என்பது அச்சு ஊடகத்திற்கு விளம்பரப் பதாகை போல இருந்தது. இணையத்தில் இதழுக்கான தளத்தில் விளம்பரம் இட்டு அச்சு இதழை விற்றனர். ஆனால் இணையத்தின் ஆற்றல் மெல்ல மெல்ல இதழ்களை ஈர்க்கத் தொடங்கியது. இரண்டும் வெவ்வேறு வெளி என்றுணர்ந்து இரண்டிலும் பெரிய ஊடகங்கள் காலூன்றியுள்ளனர். தினசரி, வாராந்திரி, மாந்தாந்திரி என்று பெரு இதழ்கள் எல்லாம் விலையில்லாமலோ, விலைவைத்தோ இணையத்தில் உள்ளன.

பல அச்சு சிற்றிதழ்கள் இணையத்தில் பெயரளவிலும் ஒரு இணையப்பக்கம் கொண்டிருப்பதில்லை. அதைவிட தகவல் தொடர்பிற்கு ஒரு மின்னஞ்சலும் இல்லை. சில இதழ்கள் ஆர்வமுடன் இணையத்தளம் தொடங்கினாலும் கொண்டுசெல்வதில் சிக்கல் கொண்டு கைவிடப்படுகின்றன. ஒன்றிரண்டு இதழ்கள் பேஸ்புக்கில் பக்கத்தைத் திறந்து இதழின் அட்டைப்படத்தை வெளியிட்டதுடன் நின்றும் விடுகின்றன. முதலில் இணையத்திலுள்ள சிற்றிதழ்களைப் பார்ப்போம்.
பல்சுவை இதழ்கள்:

கிழக்கு வாசல்
http://kizhakkuvaasal.blogspot.com

தன்னம்பிக்கை
http://thannambikkai.com

பத்ரி அவர்களின் ஆழம்
http://aazham.in/

ஜெ.பி.யின் முழக்கம்
www.jpyinmuzhakkam.com/jpyinmuzlakkam-boo.html

காவியம் மாத இதழ்
http://www.kaviyam.in/

ரௌத்திரம்
http://rowthiram.in

அமுதசுரபி
http://amudhasurabi.in

புதிய பார்வை
http://puthiyaparvai.com/

உரத்த சிந்தனை
http://vidhai2virutcham.com/

Thursday, September 24, 2015

A/c (Air conditioner) எளிமையான விளக்கங்கள்










புதிதாக ஏ.சி. வாங்குபவராக இருந்தால் உங்கள் வீட்டில் ஏ.சி. பொருத்தப்படவிருக்கும் அறையின் அளவை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்யுங்கள். 1.5 டன், 2 டன், 3 டன் என்று நம் பயன்பாட்டுக்கு ஏற்ற ஏ.சி. மெஷின்கள் உள்ளன. 150 சதுர அடி கொண்ட அறையாக இருந்தால் 1.5 டன் அளவுள்ள ஏ.சி. போதுமானது. பெரிய ஹால் என்றால் 3 டன் தேவைப்படும்.



ஏ.சி. வாங்கியதும், அதற்கேற்ற தரமான 'ஃப்யூஸ் ஒயர்', 'டிரிப்பர்' போன்றவற்றை பொருத்தவேண்டும். ஸ்பிளிட் ஏ.சி. 1.5 டன் எனில், 20 ஆம்ப்ஸ் ஒயரினால் ஆன ஃப்யூஸை பொருத்துங்கள்.இதேபோல் டிரிப்பரும் 20 ஆம்ப்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மின் சப்ளையில் கோளாறு எற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏ.சி-யைக் காப்பாற்றி விடும்.



எல்லா ஏ.சி. நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சொல்லும் அட்வைஸ்... ஏ.சி. வாங்கி பொருத்தியதும், அது எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது. அதற்கும் குறைவாகக் கொண்டு போகும்போது ஏ.சி. அதிக பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும். அப்போது கம்ப்ரஸர், காயில், ஏ.சி-க்கு செல்லும் ஒயர் என எல்லாப் பகுதியும் சூடாகிவிடும்.வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-க்களை முன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்யவேண்டும்.ஸ்பிளிட் ஏ.சி. எனில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்டுங்கள். இதனால், எந்தவித இடையூறும் இல்லாமல் குளுமையாக காற்று வரும்.

  • ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்ப்ரே அடிப்பது மிகவும் தவறு. பெர்ஃப்யூம்கள் ஏ.சி.யின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கிவிடும்,
  • நல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்காண்டிருக்கும்போதே ஃபேனை போடாதீர்கள்

Tuesday, September 22, 2015

அறநெறி வாழ்க்கை என்றால் என்ன?

இந்த சமுதாயத்தை மதித்து வாழ வேண்டும் என்ற அற நெறி 3 அம்சங்களைக் கொண்டதாக வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகிறார்.
அ) ஒழுக்கம் - தனக்கோ, பிறருக்கோ, உடலுக்கோ மனதுக்கோ எக்காலத்திலும் எண்ணத்தாலும், சொல்லலும், செயலாலும் துன்பம் தராமல் இருப்பது
ஆ) கடமை -    மனிதர்கள் வாழும் காலத்தில் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்கு கடன்பட்டவர்களேயாவர். விவசாயி பயிர் விளைவிக்கவில்லையெனில் நமக்கு உணவில்லை. நெசவாளியில்லையெனில் நம்மை அழகுபடுத்த ஆடையில்லை; கணணிப் பொறியாளர் இல்லையெனில்
சொகுசான வாழ்க்கைமுறை நமக்கு இல்லை. இவ்வாறாக சமுதாயத்திற்குக் கடன் பட்டுள்ளோம். இக் கடனை நேர்மையான முறையில் தன் உழைப்பு, அறிவு இவற்றால் தீர்க்க வேண்டும். இதுவே கடமை எனப்படுகிறது.
இ) ஈகை - இது என்னவென்றால் பிறர் துன்பத்தினைப் போக்குவது 


Sunday, September 13, 2015

குழந்தைப் பிறப்பு ரகசியங்கள்

ஒரு பெண் கருத்தரிக்க மாதத்தில் 3 நாட்கள் உகந்தவை. அவர்களுக்கு பொதுவாக 28 நாட்கள் மாத சுழற்சி [Monthly Period] வரும். இதில் முதல் 4 நாட்கள் மாத விலக்கு. 

5ம் நாளிலிருந்து 14ம் நாள் வரை சினைப் பையிலிருந்து [Ovary] ஒரு முட்டை வளரத் தொடங்கும். நன்கு வளர்ச்சியடைந்த முட்டை சினைபையிலிருந்து பெல்லொபியன் குழாய் [Fallopian Tube] வழியாக கருப்பைக்கு [Uterus] வரும். இவ்வாறு வரும் நாள்தான் Ovulation day எனப்படுகின்றது. [சிலருக்கு மாத சுழற்சி நாள் அதிகமாக இருப்பின் வளர்ச்சியடைந்த முட்டை கருப்பைக்கு வரும் நாள் மாறுபடும்]  

இம் முட்டை 2 / 3 நாட்களுக்கு கருத்தரிக்க ஏதுவாக இருக்கும். கருத்தரிக்க முடியாவிட்டால் முட்டை தளர்ச்சியடைந்து 28 நாட்களான பின் கலைந்து மாத விலக்காக வெளியேறி விடும். இம்மூன்று நாட்களில்  தந்தை தாயின் விந்து நாதத்தின் தூய்மை மற்றும் சக்தியைப் பொறுத்து நல்ல அறிவான, ஆரோக்கியமான குழந்தை பிறக்கிறது. மேலும் தாய், தந்தை எண்ணிய எண்ணங்கள், செயல்கள், அனுபவங்கள் அனைத்தும் வித்தின் மூலம் கருவுக்குச் செல்கிறது. இத்தருணத்தில்தான் உயிர் வாழ்க்கை தொடங்குகிறது; ஒரு செல் பல செல்களாக பரிணமிக்கிறது.

கருத்தரிக்கக்கூடிய அந்த 3 நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுவரை அப்பெண் என்ன செய்திருந்தாலும் அம்மூன்று நாட்களின் செயல்கள் முக்கியத்துவம் பெறுகின்றது. கருப்பையில் விந்து நாதக் கலப்பு ஏற்பட்டு குழந்தை 10 மாதம் வளர்கிறது


  • முதல் மாதம் | போல் கம்பமாகவும்
  • 2வது மாதத்தில் தலையும்
  • 3வது மாதத்தில் கால்களும்
  • 4வது மாதத்தில் மூக்கு, முகம் மற்ற உறுப்புகளும்
  • 5வது மாத்தில் காது, நாக்கு கண்களும்
  • 6வது மாதத்தில் நகமும்
  • 7வது மாதத்தில் நரம்பு, எலும்பு, மூத்திரப்பை, சுவாசப்பை, இதயம் ஆகியவை உருவாகின்றன. மேலும் மூச்சும் விட ஆரம்பிக்கிறது
  • 8வது மாதத்தில் கரு முழுமையடைகிறது
  • 9வது மாதத்தில் குழந்தை வெளியேற வசதியாக திரும்பும்
  • 10வது மாதத்தில் குழந்தை வேறு, கருப்பை வேறாகப் பிரியும். பின்பு குழந்தை பிறக்கும்






மனம் என்றால் என்ன?

 நம் உடலில் உயிர் ஓடிக் கொண்டிருக்கிறது. எப்படி கடல் நீர் காற்றால் அசைவதால் அலை உருவாகிறதோ அதுபோல் உயிரின் ஓட்டத்தால் ஓர் அலை எழுகின்றது. இதையே வேதாத்திரி மகரிஷி சீவ காந்த அலை என்கிறார். 

இச் சீவ காந்தம் ஐம்புலன்களின் (தோல், கண், காது,  வாய், மூக்கு) வழியே செல்லும் போது 5 உணர்வுகளாக (அழுத்தம், ஒளி, ஒலி,  சுவை, மணம்) தன் மாற்றம் அடைகின்றது. இவற்றை உணர மனம் தேவைப் படுகின்றது. இச்சீவகாந்தம் மூளை வழியே செல்லும் போது மனமாக தன் மாற்றம் அடைகின்றது. இம்மனம் இரண்டு செயல்களை செய்கின்றது. அவை: 

அ) சுருக்கி வைத்தல்: ஐம்புலன்களின் மூலம் பெற்ற  நமது அனுபவங்களை கருமையத்தில் பதிவுகளாக சுருக்கி வைத்தல் 

ஆ) விரித்துக் காட்டல்: அவற்றை தேவை, பழக்கம், சூழ் நிலைக்கேற்ப எண்ணங்களாக விரித்துக் காட்டல். 

 

முன் ஜென்ம வினைகள்

மது முன்னோர்களின் பாவ புண்ணியங்கள் நமக்கு கருத்தொடராக வந்து விடுகின்றன. வேதாத்திரி மகரிஷி மனிதர்களின் ஒவ்வொரு செயல்களும் அவர்களின் கருமையத்தில் பதிவு பெறும் என்கிறார்.  நம் முன்னோர்களின் பாவப்பதிவுகளால்  நாம் துன்பமடைவதை இளங்கோவடிகள்  ஊழ்வினை  உருத்து வந்து ஊட்டும் என்கிறார்.
 இந்த மாதிரியான முன்னோர்களின் பதிவுகளை நாம் கருவமைப்புப் பதிவுகள் [சஞ்தித கர்மம்] என்கிறோம்

நம் பிறப்பிற்குப் பிறகு நமது செயல்களால் பெறும் பதிகளை மேலடுக்குப் பதிவுகள் [பிராப்த கர்மம்] என்கிறோம். இவ்விரண்டு பதிவுகளும் சேர்ந்து ஒரு மனிதனின் அறிவாட்சித்தரமாக [Personality] அமைகிறது.  

கருவமைப்புப் பதிவுகளும், மேலடுக்குப் பதிவுகளும் இணைந்து நாம் விருப்பப்பட்டு புதிய செயல்களை செய்கொண்டிருப்பது  ஆகாம்ய கர்மம் எனப்படுகின்றது 


Saturday, September 12, 2015

தேர்ந்தெடுக்கும் திறன்



தெரு நாய் ஒன்றை சிறிது நேரம் ஊன்றி கவனித்தேன்.   அது உறங்குவதற்கு தேர்ந்தெடுக்கும் இடங்களே ஆபத்து நிறைந்தவைகளாகவே இருந்தன.

நடு ரோடு,  காருக்கு அடியில், வீட்டு வாசல் போன்ற இடங்களையே அது தேர்ந்தெடுக்கிறது.

இது போன்ற இடங்களில் ஆழ்ந்த உறக்கம் கொள்வது இயலாது.  ஒவ்வொரு சப்தத்திற்கும் தலை உயர்த்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.  நீண்ட நிம்மதியான தூக்கம் என்பது அந்த நாய்க்குக் கிடையாது.  

கேட்டைத் திறந்தால், காரை ஸ்டார்ட் செய்தால், ஏதாவது வண்டிகள் வந்தால், எல்லாவற்றிற்கும் மேலாக ஏதாவது வாண்டுகள் கல்லெடுத்து அடித்தால் என எப்போதும் ஏதாவது ஒரு ஆபத்து அதற்குக் காத்துக்கொண்டிருக்கிறது.

ஆனாலும் நாய் அதுபோன்ற இடங்களையே தேர்ந்தெடுக்கிறது.   இங்கு தெரு நாய்களைப் போன்ற பாவப்பட்ட ஜீவன்கள் வேறெதுவும் கிடையாது.

“நாய அடிக்கற மாதிரி அடிச்சுப்போட்டுடுவேன்” என்பது சொல் வழக்கு.  இன்று தேசிய நெடுஞ்சாலைகளில் அடிபட்டுச் சாகும் பிராணிகளில் நாய்தான் முதலிடத்தில் உள்ளது.  அதை அடித்தால் கேட்பதற்கு யாருமே இல்லை.   

குடல் சிதறி, மூளை சிதறி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் நாயின் உடல் மேல் அடுத்தடுத்து வாகனங்கள் ஏறி, பனிரண்டாம் வகுப்பில் ஹெர்பேரியத்திற்காக செம்பருத்தி போன்ற சில பூக்களைப் பறித்து, நோட்டுப் புத்தகத்தில் வைத்து அழுத்தி தட்டையாக்கி விடுவதைப் போல, அந்த நாயின் உடல் தரையோடு தரையாக தட்டையாக்கப்பட்டு தார் ரோட்டில் ஒட்டிக் கிடக்கும் காட்சிகள் நாம் அன்றாடம் காண்பவை.

இதற்குக் காரணம் நாயிடம் தேர்வு செய்யும் திறன் இல்லாததே.  எந்த இடத்தைத் தேர்வு செய்தால் யாருடைய தொந்தரவும் இன்றி நிம்மதியாக உறங்கலாம் என அதற்குத் தேர்ந்தெடுக்கத் தெரிவதில்லை.

நாம் மட்டும் என்ன? இளைத்தவர்களா?

மனிதர்களில் கூட பலருக்கு தேர்ந்தெடுக்கும் திறன் இல்லாமல் போவதால் அந்த நாயைப் போலவே நிம்மதியின்றி அலைகின்றனர்.

அந்தத் திறன் இல்லையானால் அது கிட்டத்தட்ட நாய் வாழ்க்கைதான்.   கடந்தகால அனுபவம், தற்கால சூழ்நிலை இவற்றைக் கொண்டு எதிர்கால விளைவு இப்படித்தான் இருக்கும் என்பதைக் கணித்து சரியானவற்றை தேர்ந்தெடுத்தால் அந்த நாயைப் போல துன்பப்பட வேண்டிய அவசியமில்லை.

இந்தத் திறன் இல்லாததால் மனிதன் செய்யும் தவறுகள் ஏராளம். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் மிகப்பெரிய தவறு செய்கிறான்.  பின்பு வாழ்க்கையையே போர்க்களமாய் மாற்றிக் கொள்கிறான்.  

காதலின் போது இது தெரிவதில்லை.  ஒரு சாத்வீக குணம் கொண்டவன் ரஜோ குணப்பெண்ணை காதலித்து மணந்து கொள்கிறான்.  ஆண்-பெண் கவர்ச்சி மறைந்தவுடன் அங்கு உண்மை முகம் வெளிப்படத் தொடங்குகிறது.  வாழ்வு நரகமாகிறது.
ஒரு தொழில் துவங்கும்போது யாரோடு பார்ட்னர் சேரலாம் என்பதைத் தேர்ந்தெடுக்கத் தெரியாமல் பார்னர்ஷிப் தொழில் செய்து பின்னர் ஏமாந்துபோய் புலம்புகிறான்.

சிட்பண்ட்டில் யாரிடம் பணம் போடலாம் என்பதை தேர்ந்தெடுக்கத்தெரியாமல் யாரோ ஒருவரிடம் போட்டு ஏமாந்து போகிறான்.

சிட்பண்டில் யாரைச் சேர்க்க வேண்டும் எனத் தெரியாமல் பணத்தை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு ஓடி விடும் நபர்களைச் சேர்த்து அவதிப்படுகிறான்.

10 ரூபாய் வட்டி தருகிறேன் எனச் சொல்பவனிடம் பணம் கொடுக்கலாமா வேண்டாமா என முடிவெடுக்கத் தெரியாமல் பணம் கொடுத்து ஏமாறுகிறான்.

ஒருவரிடம் எந்த அளவுக்குப் பழகலாம் எனத் தெரியாமல் அளவுக்கு அதிகமாகப் பழகி முடிவில் அது விரோதத்தில் முடிகிறது.

வீட்டுக்குள் யாரை அனுமதிக்கலாம் என்பதை தேர்ந்தெடுக்கத் தெரியாமல் கயவர்களை அனுமதித்து துன்பத்தில் சிக்கிக் கொள்கிறான்.

இதுபோல இன்னும் ஏராளமாய் சொல்லிக் கொண்டே போகலாம்.

நாய் எப்படி தூங்குவதற்கு தேர்ந்தெடுக்கும் இடத்தை தவறாகத் தேர்ந்தெடுக்கிறதோ, விளைவுகளை அறியாமல் தேர்ந்தெடுக்கிறதோ, அதே போல்தான் நாமும் விளைவுகளை அறியாமல் பல விஷயங்களை செய்துவிட்டு விழிக்கிறோம்.

தேர்ந்தெடுக்கும் திறனை குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்த்துக்கொள்ளவேண்டும்.  நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் திறன் இருந்தாலே தேர்ந்தெடுத்தலில் தவறு நிகழ வாய்ப்பில்லை.  

நமக்கு வரும் துன்பங்களில் பெரும்பாலானவை நாமே தேர்ந்தெடுத்துக்கொண்டவையே யொழிய இறைக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.  

எந்த அளவுக்கு நம் மனதில் பேராசை, சினம், பொறாமை, கடும்பற்று, உயர்வு-தாழ்வு மனப்பான்மை போன்ற குணங்கள் அதிகமாக உள்ளனவோ,  அந்த அளவுக்கு நம் தேர்ந்தெடுக்கும் திறன் குறைந்து போய் துன்பத்தில் மாட்டிக்கொள்ள வாய்ப்பு அதிகம்.  

உதாரணமாய் மிகக் குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது பேராசை.  இந்தப் பேராசை பத்து ரூபாய் வட்டி தருபவனை நிச்சயமாய் உங்களிடம் ஈர்க்கும்.  மனம் முழுக்க பேராசை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்போது தேர்ந்தெடுக்கும் திறன் இல்லாமல் போய்விடும்.  பின்பு தவறான ஆளைத் தேர்ந்தெடுத்து துன்பத்தில் அகப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.  பத்து ரூபாய் வட்டி தருகிறேன் என்பவனே தவறான ஆள்தானே....

ஆகவே தியானத்தின் மூலம் நல்ல சிந்தனைத் திறனையும், நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் திறனையும் வளர்த்துக்கொண்டால், தேர்ந்தெடுத்தலில் தவறு நிகழ வாய்ப்பில்லை.  துன்பத்திற்கும் வாய்ப்பில்லை.

குழந்தைகளுக்கு இந்த நுட்பத்தை இப்போதிருந்தே கற்றுக்கொடுப்போம்.

#ராகவேந்தர்.

Friday, September 04, 2015

காமத்தைப் புரிந்துகொள்




காமம். இன்று 14 வயது தொடங்கி எல்லோர் மனதையும் ஆக்கிரமித்துக்கொண்டு பாடாய்ப் படுத்திக் கொண்டிருப்பது. இது முற்றிலும் இயற்கையானது. 

ஆனால் இது தவறு என காலங்காலமாய் நீ போதிக்கப்பட்டிருக்கிறாய். நம் மதங்கள் பிரம்மச்சர்யத்தை மிகச் சிறப்பாய் வலியுறுத்துகின்றன.

ஆதி சங்கரரின் பஜ கோவிந்தத்தில் மூன்றாவது ஸ்லோகத்தில் சிற்றின்பம் அநித்தியமானது என்று கூறுகிறார்.

நாரீ ஸ்தனபர நாபி தேசம் 
த்ருஷ்ட்வாமாகா மோஹாவேசம்
ஏதன் மாம்ஸவஸாதி விகாரம்
மன்ஸி விசிந்திய வாரம் வாரம்

விளக்கம் :
பெண்களுடைய மார்பகத்தையும், சிற்றிடையையும் பார்த்து வெறியுடன் மோகம் கொள்கிறாய். ஆனால் அவையெல்லாம் வெறும் சதையின் விகாரத்தால் தோன்றும் அநித்திய தோற்றம் மட்டுமே என்பதை மனதில்தினம் தினம் சிந்தனை கொள்,

பட்டினத்தாரும் கூட மங்கையரின் வாய், மயிர், கண், அங்கம், யோனி முதலிய அனைத்தும் துர்நாற்றம் வீசும் தன்மையுடையது என பின்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.

“வாய் நாறும் ஊழல் மயிர்ச்சிக்கு நாறிடும் மைஇடும் கண் பீநாறும் அங்கம் பிணவெடி நாறும் பெருங்குழி வாய்ச்சீ நாறும் யோனி அழல்நாறும் இந்திரியப் பேறு சிந்திப்பாய்நாறும் மங்கையர்க் கோ இங்ஙனே மனம் பற்றியதே?”

பாரதியும் கூட “மோகத்தைக் கொன்றுவிடு.. அல்லாள் எந்தன் மூச்சை நிறுத்திவிடு” எனப் பாடுகிறார்.

இப்படி காமத்தோடு காலங்காலமாய் நீ போரிட்டுக் கொண்டிருந்தாலும் கூட, கோடியில் ஒருவரால் கூட ஆதிசங்கரர், பட்டினத்தார் இன்னும் பல சித்தர்கள் கூறியதுபோல காமத்தை வெல்ல முடியவே இல்லை. இந்த கசப்பான உண்மையை நீ ஏற்றக்கொள்ளத்தான் வேண்டும்.

இயற்கையை எதிர்ப்பது மிக மிக முட்டாள்தனமானது. அதனோடு போரிட்டு ஜெயிப்பது என்பது இயலாது. மேல் மனதில் நீ காமத்தைக் குறித்து ஒரு அருவருப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். பிரம்மச்சர்யம் மேலானது என உன் மேல் மனதை நம்ப வைக்கலாம். ஒழுக்க விதிமுறைகளை சொல்லித்தரலாம். பிறன் மனை நோக்குதல் பாவம் என பதியவைக்கலாம்.

ஆனால் இந்த மேல்மனம் என்பது ஒட்டு மொத்த மனதில் ஒரு 10 சதவிகிதம்தான். மீதி தொன்னூறு சதவிகித அடி மனதை (Unconscious Mind) முழுக்க முழுக்க காமம் ஆட்சி செய்கிறது.

மனைவியோடு நீ காபி ஷாப் போகும்போது, எதிர் டேபிளில் ஒரு ஆழகிய பெண், தன் உடல் வடிவத்தை அப்பட்டமாய் வெளிக்காட்டும் டைட் ஜீன்ஸ், டீ சர்ட் உடை அணிந்து வந்தால் கண் அனிச்சையாய் அந்தப் பெண்ணை மேயத்தான் செய்யும். பெண்களுக்கும் அப்படித்தான். இது முழுக்க முழுக்க இயற்கையான அனிச்சை செயல். இப்படிச் செய்யா விட்டால் நீ ஒரு அசாதாரணன்.

இப்போது உன் ஒழுக்க விதிகள் எல்லாம் காற்றில் பறந்துவிடும். ஆனால் நீ அந்தப் பெண்ணைப் பார்க்காதது போல கபட நாடகம் ஆடுவாய். நீ ஒரு வேடதாரி. உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கிறாய்.

இப்போது உன் மேல் மனதின் ஒழுக்க விதிகள் உன்னை குற்ற மனப்பான்மையில் ஆழ்த்தி விடும். அதற்காய் உன்னையே நீ வருத்திக்கொள்வாய்.

ஆக காமத்தைப் புரிந்து கொண்டு கடந்து சென்று விடுதலே நன்று.

ஒரு ஜீவனில் அதன் உயிரோட்டத்திற்கு அடிப்படையாக உள்ள ஜீவவித்துக் குழம்பு, இன்னொரு ஜீவனை உருவாக்க எத்தனிக்கிறது. இந்த எத்தனிப்பு உணர்வே காமம். இதைப் பற்றி உளநலவியல் நிபுணர் டாக்டர் ஷாலினி “அர்த்தமுள்ள அந்தரங்கம்” என்ற தன் புத்தகத்தில் பின்வருமாறு கூறுகிறார்.

“என்னதான் மனித சமுதாயத்தின் வாழ்வியல் தேவைக்காக ஆணும், பெண்ணும் பாலியல் ஒழுக்கங்களைக் கடைபிடித்தாலும், மரபணுக்களைப் பொறுத்தவரை ஒழுக்கம் என்ற சமாச்சாரமே அதற்குத் தெரியாது. மரபணுவிற்குத் தெரிந்ததெல்லாம் தன்னைத் தானே முடிந்தமட்டும் அதிகமாக மறுமைக்கு கொண்டு போவதுதான். இதனால் அவை ஆண்களில் கூடுமானவரை அதிகப் பெண்களோடு கூடி வேகவேகமாக இனத்தைப் பெருக்கிவிடும் உத்வேகத்தைத் தூண்டுகின்றன. இதுவே பெண்களில் முடிந்த மட்டும் விதம்விதமான ஆண்களோடு கூடி மரபணுக்களை அபிவிருத்தி செய்து, தரத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தூண்டுகின்றன. இந்த மரபணுவின் வேக இனப்பெருக்கம், தரமான இனப்பெருக்கம் ஆகிய இரண்டு தூண்டுதல்களும் ஆணையும், பெண்ணையும் திருமணத்திற்கு வெளியே உறவு மேற்கொள்ளவும் உந்தின.” ஆக காமம் மரபணு சம்பந்தப்பட்டது.

இத்தகைய காமத்தோடு காலங்காலமாய் போரிட்டு நீ கண்ட பலன் என்னவென்றால் நீ ஒரு கபட வேடதாரியாக மாறியதுதான். ஒரு சமுதாயம் முழுக்க பொய் முக மூடி போட்டுக்கொண்டே அலைகிறது. உன்னை ஒழுக்கமானவனாகக் காட்டிக் கொள்ள நீ பற்பல முயற்சிகளை மேற்கொள்கிறாய். அன்றாட வாழ்வில் சமுதாயத்தில் நடக்கும் சின்னச் சின்னப் பிரச்சனைகளுக்கும், மனிதனின் காமத்திற்கு எதிரான போருக்கும் மிகப்பெரிய தொடர்பிருக்கிறது.

உதாரணமாய்…….
இன்று தெருவில் யாரோ ஒரு ஆணும், பெண்ணும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக என் அருகில் நின்ற இரு பெண்கள் வதந்தி பேசிக்கொண்டிருந்தனர். அவர்களைப் பற்றி எதுவுமே தெரியாத போதும் ஏன் இப்படி வாய் கூசாமல் பேசுகின்றனர்? இது எப்படி சாத்தியமாகிறது? காலங்காலமாய் காமத்தை தவறு என செய்த போதனையின் விளைவுதான் இந்த வதந்திப் பேச்சு.

ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டிருந்தாலே “அவங்க ரெண்டுபேருக்கும் கள்ளத்தொடர்பு இருக்கு” என இருட்டுக்கடை திருநெல்வேலி அல்வா இலவசமாய் கிடைத்தது போல வதந்தி பேசி இன்புறுகிறாய். உண்மையில் இப்படி வதந்தி பேசுவதென்பது உன் மனம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வக்கிரக் காமத்தின் வெளிப்பாடு.

நீ சொல்வது உண்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே. அது அவர்கள் பிரச்சனை. உனக்கு என்ன நஷ்டம்? அதனால் வரும் விளைவுகளுக்கு அவர்கள் தானே பொறுப்பு. அதை நீ ஏன் பெரிதுபடுத்திப் பேசுகிறாய்? சற்று யோசித்துப் பார். உன்னால் அப்படி இருக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தின், பொறாமையின் வெளிப்பாடுதான் இது. உண்மையில் உன் அடிமனதில் பற்பல வக்கிரங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவை உனக்கு ஒரு குற்ற உணர்வைத் தருகின்றன. நீ வெளிப்பட்டு விடுவாயோ என்ற பயம் உன்னை ஆக்கிரமித்துக் கொள்கிறது. உன் குட்டு உடைந்து விடுமோ என அஞ்சுகிறாய். அடுத்தவனை இப்படிப் பேசுவதன் மூலம் உன் அசிங்கங்களை மறைக்க முயலுகிறாய்.

நீ ஒழுக்கமானவன் என காட்டிக் கொள்ள கடும் முயற்சி செய்கிறாய். உண்மையில் உன் மனதில் யாருக்கும் தெரியாமல் நடந்த கற்பழிப்புகள் எத்தனை எத்தனை? உடலளவில் இல்லையெனினும் மனதளவில் நீ எத்தனை பேரோடு உறவு கொண்டிருக்கிறாய்? இந்த உண்மைகளை உன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. உடனே, “நான் ஒரு ஏக பத்தினி விரதன்/விரதி. இந்த இப்பிறவிக்கு இரு மாதரை/ஆடவரை சிந்தையாலும் தொடேன்” என வசனம் பேசுவாய். காமத்தில் நிறைவு அடையாத ஒருவரால் தான் இப்படி யாரைப் பார்த்தாலும் தவறாகப் பேச இயலும்.

இது போல சமுதாயத்தின் பற்பல பிரச்சனைகளுக்கும் மிகப்பெரும்பாலும் அடிப்படைக் காரணமாய் இருப்பது காமமே

காமம் கடந்து விட்ட ஒருவனுக்கு, இவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவன் யாரையும் தவறாகக் கருதுவதேயில்லை. காமத்தை இயற்கையானது என ஏற்றுக்கொள்ளாமல், அதை எதிர்த்துப் போரிடுவதால், கபட நாடகமாடும் இத்தகைய மிக இழிவான மனநிலையைத்தான் நீ பெற்றிருக்கிறாய். இதுவே பன்நெடுங்கால போதனையின் விளைவு.

ஓஷோ இத்தகைய கபட வேடதாரிகளைப் பற்றியும், அவர்களால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும், “காமத்திலிருந்து கடவுளுக்கு” என்ற புத்தகத்தில் மிக விரிவாகப் பேசுகிறார்.

நான் இப்போது உன்னைக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். முதலில் உன்னை நீ முழுமையாக ஏற்றுக்கொள். என்னுள் காமம் இருக்கிறது என ஒத்துக்கொள். அது இயற்கையானது என உணர்ந்துகொள். அந்த வக்கிரக் காமத்தோடு உன்னை நீயே அங்கீகரித்துக் கொள். கபட வேடம் போடுவதை நிறுத்து. உன்னை நல்லவனாகக் காட்டிக் கொள்ளும் முட்டாள் தனமான முயற்சியைக் கைவிடு. பிறகு காமத்தை கடப்பது இலகுவாகும். அதற்கான வழி உன்னுள்ளேயே ஒளிரத் தொடங்கும். உன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும்.


Saturday, August 22, 2015

அவன் ஒரு சரியான லூசு

"அவன் ஒரு சரியான லூசு"

இன்று பெரும்பான்மையோர் சர்வ சாதாரணமாய் உபயோகிக்கும் வார்த்தைகள் இவை. சாட்சிபாவமாய் உற்று நோக்கினால் கணக்கேயின்றி எண்ணங்களை உற்பத்தி செய்து வெளியிட்டுக்கொண்டேயிருக்கும் நம் மனதை விட பைத்தியக்காரன் வேறு யாரும் இல்லை. "பூப்பிளக்க வரும் பூற்றீசல் போல" என்ற பட்டினத்தாரின் வரிகளைப் போல....

மழைக்காலத்தில் பூமியிலுள்ள துளையிலிருந்து ஒன்றின் பின் ஒன்றாக வரிசையாக வந்துகொண்டேயிருக்கும் ஈசல் பூச்சிகளைப் போல மனம் அடுத்தடுத்து எண்ணங்களை உற்பத்தி செய்துகொண்டேயிருக்கிறது. உடலின் ஆற்றலில் பெரும்பகுதியை மனமே எடுத்துக்கொள்கிறது.... இல்லை...இல்லை.... திருடிக்கொள்கிறது. உடல் இயக்கத்தை வேகமாக்கினால் மனதிற்கு ஆற்றல் செல்வது தடுக்கப்பட்டு விழிப்புணர்விற்கு முழு ஆற்றலும் மடைமாற்றம் செய்யப்படும்.

ரஷ்ய ஞானி குர்ஜிஃப் (gurdjieff)    இதற்கென சில உடல் அசைவு நடனங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறார்.  Gurdjieff movements என இதற்குப் பெயர். இந்த அசைவுகளை மேற்கொள்ளும் போது ஆற்றல் முழுவதும் விழிப்புணர்வுக்குத் திருப்பி விடப்படும்.  நீங்கள் கடந்த காலத்திலோ எதிர்காலத்திலோ சஞ்சரிப்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் இந்த அசைவுகள் அடைத்துவிடும்.

இங்கு இப்போது மட்டுமே நீங்கள் இருக்கமுடியும். அதாவது மனமற்ற நிலை.

தீராத தாகம் இருந்தால் மட்டுமே இதை நாம் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் இதைச் சொல்லித் தருவதற்கான ஆசிரியர்கள் இங்கு மிக மிகக் குறைவு. குழந்தைப் பருவத்திலிருந்தே குர்ஜிஃப் அசைவுகள், சூஃபி நடனம், டைனமிக் தியானம் போன்றவற்றைக் கற்றுக்கொடுத்துவிட்டால்.... அந்தக் குழந்தை ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தையாய் மாறும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் கொள்ளத் தேவையேயில்லை.

ஆரம்பத்தில் உடலின் வேகமான அசைவுகளின்போது மட்டுமே சாத்தியமாகும் மனமற்ற நிலை, தொடர்ந்த பயிற்சியில் அசையாது அமர்ந்திருக்கும் நிலையிலும் கைகூடும்.

நண்பர்களே, பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய சாதனையாக எல்லா ஞானிகளும் கருதுவது மனமற்ற நிலையைத்தான். இதை அடைந்து விட்டவனுக்கு உலக வாழ்க்கையின் வெற்றிகளெல்லாம் வெறும் குப்பைகளே.

அயராத விழிப்புணர்வே நம் தாகமாக இருக்கட்டும்.

#ராகவேந்தர்

a knowledge sharing blog: மனதோடு விளையாlடு

a knowledge sharing blog: மனதோடு விளையாlடு

மனதோடு விளையாlடு



குறிப்பு:
இது மனதால் இயங்கிக்கொண்டிருப்போருக்கான கட்டுரை.   மனம் கடந்து சென்றவர்களுக்கு இக்கட்டுரை தேவையேயில்லை.

மனதில் இடையறாது எண்ணங்கள் உற்பத்தியாகி ஓடிக் கொண்டேயிருக்கின்றன. விழிப்புணர்வுடன் இந்த எண்ணங்களை கவனிப்பதே ஒரு விளையாட்டுத்தான். இந்த விளையாட்டை விளையாடலாம் வாருங்கள். விளையாட்டை ஆரம்பிப்பதற்கு முன் வேதாத்திரி மகரிஷி சொல்லும் எண்ணம் என்றால் என்ன? மனதின் இரு வேலைகள் என்ன?என்பதைச் சுருக்கமாய்ப் புரிந்து கொண்டு இந்த விளையாட்டைத் தொடங்குவோம்.
முதலில் எண்ணம் என்றால் என்ன?

மனதிலே ஏற்கெனவே பெற்ற அனுபவப்பதிவுகள் தானாகவோ, நாம் விரும்பியோ, புறச்சூழ்நிலைகளாலோ தூண்டப்பட்டு மூளைச்செல்களால் விரித்துக் காட்டப்படும் நிகழ்வே எண்ணம். 

அதாவது “மிளகாய்ப் பொடி போட்டு செவச் செவன்னு மாங்காய்த் துண்டு” என்று சொன்னவுடனே வாயில் எச்சில் ஊறுகிறது. மனதிலே ஏற்கெனவே நாம் மாங்காயைச் சுவைத்துப் பெற்ற அனுபவப் பதிவு உண்டு. எனவே “மாங்காய்த்துண்டு” எனச் சொன்னவுடனே அந்தக் குறிப்பிட்ட அனுபவம் மனதிலிருந்து (கருமையம்) எடுத்துவரப்பட்டு, மூளைச் செல்களால் விரித்துக்காட்டப்பட்டது.

இப்போது நாம் “ஆப்பிள் பை” என்றொரு அமெரிக்கப் பதார்த்தத்தின் பெயரைச் சொன்னால் எந்த ஒரு இராசாயன மாற்றமும் நம்மில் நிகழ்வதில்லை. ஏனெனில் அதை நாம் இதற்குமுன்பு சுவைத்ததில்லை.  எனவே அனுபவப் பதிவு என்பது இல்லை.  விரித்துக்காட்டுவதற்கும் ஏதுமில்லை. ஆக ஏற்கெனவே பெற்ற அனுபவப் பதிவு மூளைச் செல்களால் விரித்துக்காட்டப்படுவதே எண்ணம்.

சரி.  இந்த அனுபவங்கள் நம்முள் பதிவதற்கான உள்ளீட்டுக் கருவிகள் (Input Devices) எவை?  கம்ப்யூட்டரில் கீ-போர்ட், மவுஸ், ஸ்கேனர் என பல்வேறு உள்ளிட்டுக் கருவிகள் (Input Devices) உள்ளன.  அவை மூலம் எந்தத் தகவலை உள்ளே பதித்தோமோ அதைத்தான் வெளியே எடுக்க முடியும். அதே போலத்தான் நம்மிடமும். “மாங்காய் ஊறுகாய்” யின் சுவை மனதில் அனுபவமாகப் பதியக் காரணமாய் இருந்த கருவி எது? 

நாக்கு.

ஆக விஷயங்கள், அனுபவங்கள் நம் உள்ளே சென்று பதிவதற்கான கருவிகள் நம் ஐந்து புலன்களே. அதாவது தோல், நாக்கு, மூக்கு, கண், காது இக்கருவிகள் மூலம் எவை உள்ளே சென்று பதிந்தனவோ அதுவே பிற்பாடு தானாகவோ, புறச்சூழ்நிலை காரணமாகவோ, நாம் விரும்பியோ மீண்டும் தூண்டப்படும்போது மூளைச்செல்களால் விரித்துக் காட்டப்படுகிறது. சுருக்கமாய் எது ஐந்து புலன்கள் மூலம் உள்ளே சென்றதோ அதுவே வெளியே எண்ணங்களாக மலர்கிறது.

ஆக நல்ல எண்ணங்களாக மலர வேண்டுமானால் ஐந்து புலன்கள் மூலம் நல்லனவற்றை உள்ளே பதிய வேண்டும்.  “எது உள்ள போகுதோ அதுதான் வெளிய வரணுங்கற அவசியம் இல்ல” என மிரண்டா விளம்பரத்தில் நடிகை அசின் சொல்லுவார். ஆனால் இங்கே எது உள்ளே செல்கிறதோ அதுவே வெளி வரும்.

இதுவே தீயதைப் பார்க்காதே, தீயதை கேட்காதே, தீயதைப் பேசாதே என மூன்று குரங்குகள் மூலம் சொல்லப்பட்டது.

ஏனெனில் தீய விஷயங்களை ஒரு முறை ஐந்து புலன்கள் மூலம் உள்ளே பதித்து விட்டால் அவை மீண்டும் மீண்டும் எண்ணங்களாக மலர்ந்து அதற்குரிய ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தும். ஆக இப்போது எண்ணம் என்றால் என்ன என்றும் அது உருவாகக் காரணம் என்ன என்பது குறித்தும் தெரிந்து கொண்டோம்.  இப்போது எண்ணங்கள் தூண்டப்படுவதற்கான கருவிகள் எவை  என்பதையும் ஆராய்வோம்.

இப்போது நீங்கள் ரோட்டில் நடந்து சென்று  கொண்டிருக்கிறீர்கள்.   ஒரு வீட்டிலிருந்து கமகம வென சாம்பார் வாசனை வருகிறது. உடனே உங்கள் அனுபவப்பதிவு தூண்டப்பட்டு அதிலிருந்து எண்ணங்கள் ஓடத் தொடங்குகின்றன. 'அட…. இது அம்மா வைக்கற சாம்பார் வாசனை மாதிரியே இருக்கே.   அம்மா கையில சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு.   இந்த வாரம் அம்மா வீட்டுக்கு போய் அம்மா கையால சாப்பிடணும்.   வண்டி வேற இல்லயே.  பஸ்சுலதான் போகணும். ஞாயிற்றுக்கிழமைகள்ள நம்ம ஊருக்கு பஸ்சுல போறதுன்னா……அப்பா……கூட்டம் தாங்க முடியாது.  கால் வைக்கவே இடம் இருக்காது.  ரொம்ப சிரமம்.  பேசாம நம்ம ஆனந்த் கிட்ட வண்டி வாங்கிட்டு போயிற வேண்டியதுதான்.' இப்படி எண்ணம் ஓடத் தொடங்குகிறது.   அம்மா, ஊர், பஸ், நண்பன் என பல்வேறு நினைவுகளைத் தூண்டி விட்டது எது? சாம்பார் வாசனை.   இதை நுகர்ந்தது மூக்கு.  ஆக மூக்குதான் வாசனையை நுகர்ந்து மேற்கண்ட எண்ண ஓட்டங்களுக்குக் காரணமானது. இதுபோல ஐந்து புலன்களுமே பல்வேறு அனுபவப் பதிவுகள் எண்ணங்களாக மாறி ஓடுவதற்குக் காரணமாகின்றன.

ஆக மனதில் அனுபவங்கள் பதிவதற்கும், பிற்பாடு அவை எண்ணங்களாக மாறி ஓடத்தொடங்குவதற்கும் ஐந்து புலன்கள்தான் காரணமாக இருக்கின்றன. (வேறு சில காரணங்களும் உள்ளன.  அவை பற்றிப் பிறகு பேசுவோம்.  இப்போதைக்கு இந்தப் புரிதல் போதும்)

இப்போது மனதின் இரண்டு வேலைகள் என்ன என்பதைக் காண்போம்.

1.  பார்த்ததை பதிவு செய்தல் (ஐந்து புலன் அனுபவங்களை)
2.  பதிவு செய்ததை விரித்துக் காட்டுதல்.

நீங்கள் பாகுபலி திரைப்படம் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.  அப்போது உங்கள் மனதில் வேறு எந்த எண்ணங்களும் தோன்றுவதில்லை.  படத்தோடு ஒன்றி விட்டீர்கள்.  பெயர், ஜாதி, மதம் என உங்களின் அனைத்து அடையாளங்களையும் மறந்து படம் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இப்போது மனதின் முதல் வேலையாகிய பார்த்ததைப் பதிவு செய்தல் நடைபெறுகிறது.

பிறகு மாலையில் வீட்டில் ஓய்வாக அமர்ந்திருக்கிறீர்கள்.  இப்போது அந்தத் திரைப்படத்தில் நீங்கள் கண்ட காட்சிகளை எல்லாம் மனம் விரித்துக்காட்டுகிறது. இப்போது மனதின் இரண்டாம் வேலையாகிய பதிவு செய்ததை விரித்துக் காட்டுதல் நடைபெறுகிறது.

எப்படி மாடுகள் புல் மேய்ந்து விட்டு, ஓய்வாக இருக்கும்போது உணவை மீண்டும் வாய்க்குக் கொண்டுவந்து அசை போடுகின்றனவோ அப்படித்தான் இதுவும். நீங்கள் இந்தத் திரைப்படத்தை பார்த்திராவிட்டால் அந்தப் படத்தின் காட்சிகள் இப்போது விரித்துக் காட்டப்படுவதற்கு வாய்ப்பேயில்லை. எனவே எது உள்ளே சென்றதோ அதுவே வெளியே வருகிறது என்று ஏற்கெனவே சொன்னதை மீண்டும் நினைவு கூறுவோம்.

இதில் மனதின் இரண்டாவது வேலையாகிய, பதிவு செய்ததை விரித்துக்காட்டலை நிறுத்திவிட்டால் அதுவே மனம் கடந்த நிலை.  அதைப் பற்றி பிறகு பார்க்கலாம்.

ஆக...

எண்ணம் என்றால் என்ன?  
மனதின் 2 வேலைகள் யாவை? 
என்ற கேள்விகளுக்கு விடை கண்டு விட்டோம். இப்போது விளையாட்டைத் தொடங்குவோம். மனதின் எண்ண ஓட்டத்திற்கான ஒரு உதாரணத்தோடு இந்த விளையாட்டை ஆரம்பிப்போம்.

அருகருகே வசிக்கும் இரு குடும்பத்தலைவிகள் உரையாடிக் கொள்கின்றனர். “ஏய் புஷ்பா,  நாங்க இன்னிக்கு குடும்பத்தோட கோயமுத்தூர் போறோம். ப்ரூக் பீல்டுல ஷாப்பிங் பண்ணிட்டு அப்படியே சினிமாவுக்கு போயிட்டு வர்றோம்.  கொஞ்சம் வீட்ட பாத்துக்க” சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள் ரோஸி. "சரி" என்று விட்டேத்தியாய்ச் சொல்லி விட்டு காம்பவுண்ட் சுவரிலிருந்து மெல்ல நடந்து வந்து தன் விட்டு வரவேற்பறையில் அமர்கிறாள் புஷ்பா. தானாய் எழுந்து ஓடும் அவளின் எண்ண ஓட்டங்களை சற்றுக் கூர்ந்து கவனிப்போம்.

“சே.  இவர்களெல்லாம் குடும்பத்தோடு கோயம்புத்தூருக்கு ஷாப்பிங் போறாங்க.  நம்ம உறவினர் ஒருத்தர் ஆபரேசன் பண்ணி கோவை மருத்துவமனையில படுத்துருக்கார்.  நம்மளும் ஒரு வாரமா அவரப் போய் பாத்துட்டு வரணும்னு நினைக்கிறோம்.  ஆனா ஏதோ ஒரு வேல இருந்துட்டே இருக்கு.  இன்னிக்கு இவங்களோடவே போனா சிரமமில்லாம கார்ல போய் எறங்கிட்டு, வரும்போது பஸ்சுல வந்துடலாம்.  ஆனா எப்படிப் போறது.  துவைக்க வேண்டிய துணி மல மாதிரி குவிஞ்சுகிடக்கு.  ஒரு வாரமா தண்ணி வராம இன்னிக்குத்தான் தண்ணி வருது.  தண்ணி வர்ற அன்னிக்கே துணி துவச்சுடனும்.  இல்லேனா அடுத்து எப்ப தண்ணி வரும்னு சொல்ல முடியாது.  பக்கத்து வீடு மாதிரி நம்ப வீட்லயும் ஒரு போர்வெல் போட்டுட்டா பிரச்சனை இருக்காது.  ஐயோ…. இத்தன துணியையும் துவைக்கறத நெனச்சாலே மலப்பா இருக்கு.  துவச்சுட்டு நிமிந்தா இடுப்பெல்லாம் பயங்கரமா வலிக்குது இந்த மனுசங்கிட்ட ஒரு ஆட்டோமாட்டிக் வாஷிங் மிஷின் வாங்கித் தரச்சொல்லி எத்தன நாளா கேக்குறேன்.  இந்தப் பணம் வரட்டும்.  போனஸ் வரட்டும்னு எதோ ஒண்ணு சொல்லி ஒப்பேத்துறார்.  ஐயய்யோ.  அவரு மத்தியானம் சாப்பிட வருவாரே.  அதுக்குள்ள சமயலயும் முடிக்கணுமே.  என்ன சமைக்க? வீட்டுல ஒரு காய்கறி இல்ல.  நேத்து இந்த மனுசன்ட படிச்சுப் படிச்சுச் சொன்னேன்.  வீட்டுக்கு வரும்போது மறக்காம மார்க்கெட்டுக்குப்போய் காய்கறி வாங்கிட்டு வாங்கன்னு.  வழக்கம்போல மறந்துட்டு வந்துட்டு பல்லிலிக்கிறார்.  என்ன செய்ய.  இப்ப இந்த வேகாத வெயில்ல அந்த முக்கு வரைக்கும் நடந்து போய் கணேஷ் கடையில காய் வாங்கிட்டு வரணும்.  வெய்யில நடந்துட்டு வந்தா தலவலி வந்துடும்.  அப்புறம் ஒரு ஒன்னவர் ரெஸ்ட் எடுத்தாதான் வேற வேலயே செய்யமுடியும்.  இந்த மனுசன்ட்ட ஒரு செகண்ட்ஸ் ஸ்கூட்டியாவது வாங்கித் தரச் சொல்லி கேக்கறேன்.  ம்.. அசைய மாட்டேங்கராரே.  சே…. நம்ம பிறந்த வீட்டுல எப்படி ராணி மாதிரி வாழ்ந்தோம். அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் எல்லாம் நம்ம வீட்டுலயேதான் இருப்பாங்க.  இந்த வானதி…….நம்ம வீட்லயேதான் தூங்குவா.   அட….வானதி இப்ப எங்க இருக்கா? யாரையோ லவ் மேரேஜ் பண்ணிகிட்டு சிங்கப்பூர் போய்ட்டதா சொன்னாங்க.  அம்மா வீட்டுக்கு போகும்போது வானதியின் போன், இ-மெயில் ஏதாவது வாங்கி அவகூட பேசணும்.  அவளப் பாத்தே ரொம்ப நாளாச்சு.  முடிஞ்சா ஒருமுறை சிங்கப்பூர் போய் பாத்துட்டு வரணும்.  ம்கும்.  இந்தத் திருப்பூர விட்டே வெளியே போக முடியல.  இதுல சிங்கப்பூர் வேறயா?” இப்படியாக அவள் எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது கேஸ் சிலிண்டர் ஆட்டோ வந்து நிற்கும் சப்தம் கேட்கிறது.

ஜன்னல் வழியாக வெளியே பார்க்கிறாள் புஷ்பா. எதிர் வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் வந்துள்ளது.

“அட… இவங்க வீட்டுக்கு சிலிண்டர் வந்துடுச்சா?  ரெண்டு பேரும் ஒண்ணாதானே புக் பண்ணினோம்.  இவங்களுக்கு மட்டும் வந்துடுச்சு.  நம்ம சிலிண்டர் வேற தீர்ற கண்டிஷன்ல இருக்கு.  எப்பத் தீரும்னு தெரியல.   பாதி சமயல்ல தீந்துட்டா வம்பு.  இவருக்குப் போன் பண்ணி வரும்போது கேஸ் ஆபிசுக்கு போய் செக் பண்ணிட்டு வரச்சொல்வோம்.”

பழைய எண்ண ஓட்டங்கள் துண்டிக்கப்பட்டு, புதிய எண்ண ஓட்டங்கள்  ஆரம்பிக்கின்றன. கணவரின்  மொபைலுக்கு அழைக்கிறாள்.   “முன்பே வா…என் அன்பே வா…..” என காலர் ட்யூன் ஒலிக்கிறது. வெகு நேரம் ஒலித்தும் அவர் போனை எடுக்கவேயில்லை.  கால் கட்டாகி விடுகிறது. 'சே…. இது எப்பவுமே ஒரு ஆத்திரம் அவசரம்னு கூப்டா கூட போன எடுக்காது 'என சலித்துக் கொண்டே போனை ஷோபாவில் தூக்கிப்போடுகிறாள். முன்பே வா என்ற காலர் ட்யூனை அவள் மனம் பிடித்துக் கொள்கிறது.  அவளை அறியாமல் அந்தப் பாட்டை முணுமுணுக்கத் தொடங்குகிறாள்.

எண்ண ஓட்டம் தொடருகிறது.

“அட இந்தப் படம் சூப்பர் படமாச்சே.  சூர்யா அவ்ளோ அழகு.  காலேஜ் மேட் கவிதா சூர்யாவோட தீவிர பேன்.  அவளும் நானும் காலேஜ் படிக்கறப்போ கட் அடிச்சுட்டு இந்தப் படத்துக்கு போய் வீட்ல மாட்னோம்.  அப்பா இரண்டு நாளா எங்கிட்ட பேசவே இல்லை.  ஒரு வழியா அவர சமாதானம் பண்றதுக்குள்ள போது போதுன்னு ஆயிடுச்சு.“ இப்படியாக அவள் எண்ண ஓட்டம் தொடருகிறது.  இவையெல்லாமே அவளுடைய கட்டுப்பாடின்றி தானாகவே எழுந்து அலையும் எண்ணங்கள்.   

இவற்றால் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஒரு அரை மணி நேரத்தை இந்த எண்ண ஓட்டங்கள் தின்றிருக்கும்.  அந்த அரை மணி நேரமும் இவள் குயிலோசையை, தென்றலை, பாடலை என எதையும் அனுபவிக்கவே இல்லை.  நேரத்தை தவற விட்டது விட்டதுதான்.  அதைத் திரும்பப் பெற முடியாது.  இந்த அரை மணி நேரத்தை எண்ணங்களே ஆக்ரமித்துக் கொண்டதால் அதை அவள் வாழவே இல்லை.

"எண்ணம் தானாக எழுந்து அலையாமல் எண்ணத்தில் எண்ணமாய் இருப்பதே யோகம். எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் ஞானி" என்கிறார் வேதாத்திரி மகரிஷி.

நமது எண்ணம் சி.டி ப்ளேயர் போல இருக்க வேண்டும்.  ஆனால் அது எப். எம் ரேடியோவைப் போல இருக்கிறது.   சி.டி .பளேயரில் நாம் விரும்பும் பாடலைக் கேட்கலாம்.  ஒரு பாடல் பிடிக்கவில்லை எனில் ஸ்கிப் செய்துவிட்டு அடுத்த பாடலுக்குச் சென்று விடலாம்.   ஆனால் எப்.எம் ரேடியோவில் ஒலிபரப்பப்படும் பாடலைத்தான் நாம் கேட்க வேண்டும்.  நம் விருப்பத்தேர்வு கிடையாது.

சி.டி ப்ளேயரைப்போல் நம் மனதிலும் நாம் விரும்பும் எண்ணங்கள்தான் ஓட வேண்டும்.  ஆனால் எப். எம் ரேடியோவைப் போல அதுவே எண்ணங்களை உற்பத்தி செய்து ஒலிபரப்பிக்கொண்டே இருக்கிறது. மனதை எப். எம் ரேடியோவிலிருந்து சி.டி ப்ளேயராக எப்படி மாற்றுவது?

உங்கள் செல் போனில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் அடிக்குமாறு அலாரம் வைத்துக் கொள்ளுங்கள்.  இந்த அலாரத்திற்குப் பெயர் விழிப்புணர்வு அலாரம். இந்த அலாரம் அடித்தவுடன், விழிப்புணர்வுக்கு வந்து விடுங்கள். விழிப்புணர்வுக்கு வந்த அந்த விநாடியில் உங்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது என நினைவு கூறுங்கள்.  

இப்போது புஷ்பாவின் எண்ண ஓட்டத்தை உதாரணமாக்க் கொண்டு ஆராய்வோம். புஷ்பாவின் எண்ண ஓட்டங்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்:

அ)  சிலிண்டர் வருவதற்கு முன் ஓடிக்கொண்டிருந்த ஒரு பகுதி. 
ஆ) சிலிண்டர் வந்த பின் ஓடிய ஒரு பகுதி.

அலாரம் அடித்து விழிப்புணர்வுக்கு நீங்கள் வந்த போது, சிங்கப்பூர் வானதியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என வைத்துக் கொள்வோம். இப்போது சிங்கப்பூர் வானதியின் நினைவு ஏன் வந்தது என பின்னோக்கிச் சென்று சிந்தியுங்கள்.

அம்மா வீடு – ஸ்கூட்டி – காய்கறி – சமையல் – வீட்டுக்காரர் – வாஷிங் மெஷின் – போர்வெல் – தண்ணீர் – உறவினர் – கோயமுத்தூர் – பக்கத்துவிட்டு ரோஸி.  ஆக இந்த எண்ண ஓட்டம் துவங்கிய புலன் காது.

இப்போது இந்த எண்ண ஓட்டத்திற்கான மூலத்தை கண்டு பிடித்தாயிற்று.  கோயமுத்தூர் போகிறோம் என பக்கத்துவீட்டு ரோஸி சொன்னது நம்மை சிங்கப்பூர் வரை இழுத்துச் சென்றிருக்கிறது. இப்போது அந்த எண்ணத்தை பிறந்த இடத்திற்கே கொண்டு வந்தாயிற்று.

அதேபோல இரண்டாவது பகுதியில் போன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏன் எழுந்தது?  அப்பா, சினிமா, கவிதா, காலேஜ், முன்பே வா பாடல், ரிங் டோன், சிலிண்டர், கேஸ் சிலிண்டர் ஆட்டோ என பின்னோக்கிச் சென்று அந்த எண்ணத்திற்கான மூலத்தையும் கண்டுபிடித்தாயிற்று. ஆரம்ப சாதகர்களுக்கு ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குள் ஊருடுவிச் செல்வது சிரமம். ஒரு எண்ணத் துண்டின் மூலம் கண்டுபிடித்தால் போதுமானது.

ஆரம்பத்தில் இது மிகக் கடினமானதாக இருக்கும். பின்னோக்கி சென்று மூலத்தைக் கண்டுபிடிக்க மூளை ஒத்துழைக்க மறுக்கும்.  தொடர்ந்த பயிற்சியில் இது எளிதாகும். அதேபோல எண்ண ஓட்டம் இருக்கும்போது விழிப்புணர்வு இருக்காது.  விழிப்புணர்வு வந்தவுடன் எண்ண ஓட்டம் நின்று போகும். பின்பு ஒரு கட்டத்தில் சிங்கப்பூர் செல்லும் வரை விழிப்புணர்வு தூங்காது.  இடையிலேயே விழித்துக் கொண்டு, தேவையில்லாத எண்ண ஓட்டத்தை மறைந்து போகச் செய்து விடும். பின்பு விழிப்புணர்வும் இருக்கும்.   எண்ண ஓட்டங்களும் இருக்கும்.  சாட்சி பாவமாய் நின்று எண்ண ஓட்டங்களை வெறுமனே கவனிக்கலாம்.  அவற்றிற்கு சக்தி தராமல் வெறுமனே மேகத்தின் ஓட்டங்களை போல ஓடச் செய்யலாம்.  

ஒரு எண்ண ஓட்டம் பிடிக்கா விட்டால், அதை நிறுத்தி விட்டு, உங்களுக்கு விருப்பமான எண்ண ஓட்டத்தைத் தேர்வு செய்யலாம்.  இப்போது உங்கள் மனம் சி.டி ப்ளேயராக மாறி விட்டது.  மெல்ல மெல்ல மனம் ஒரு கருவியாய் மாறும்.  இப்போது நீங்கள் எஜமான்.  மனம் ஒரு அடிமை. இது ஒரு அற்புதமான விளையாட்டு.

ஆக முதலில் தானாக எழுந்து அலையும் எண்ணங்களானாலும் அவை நல்ல எண்ணங்களாக இருக்க வேண்டும்.  அதற்காக ஐந்து புலன்கள் மூலம் உள்ளிடும் அனுபவங்களை நல்லதாக மாற்றுகிறோம்.  

தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ துன்பம் தராத எண்ணங்களே நல்ல எண்ணங்கள்.

இரண்டாவதாக தானாக எழுந்து அலையும் எண்ணங்கள் நல்ல எண்ணங்களாகவே இருந்தாலும், அவை நம்முடைய கட்டுப்பாடின்றி எழுந்து அலைகின்றன.  அது அவ்வளவு உயர்வானதன்று.   எனவே விழிப்புணர்வுப் பயிற்சியின் மூலம் அவற்றின் மூலத்தை கண்டுபிடித்து எண்ணங்களை பிறந்த இடத்திலேயே ஒடுக்கிப் பழகுகிறோம்.

மூன்றாவதாக அயராத விழிப்புணர்வு மூலம் எண்ண ஓட்டங்களை தொடர்ந்து கண்காணிக்கப் பழகுகிறோம்.  வேண்டுமானால் ஒரு எண்ணத்தை ஓட்டவும், நிறுத்தவும், நம் விருப்பத் தேர்வின் அடிப்படையில் மனதை ஒரு கருவியாய், அடிமையாய் மாற்றுகிறோம்.

இப்படி மாற்றியவனுக்கு உலகம் வசப்படும்.

சரி.  இப்படி மாற்றுவதால் என்ன பயன்?  அப்படியே விட்டுவிட்டாலும் வாழ்க்கை நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது இல்லையா? என ஒரு கேள்வி எழலாம். இப்போது மீண்டும் புஷ்பாவின் எண்ண ஓட்டங்களைக் கவனிப்போம்.

புஷ்பாவின் எண்ண ஓட்டங்களில் தேவையின் அடிப்படையில் சில எண்ணங்கள் உற்பத்தியாகின.
1. வாஷிங் மெஷின்.
2. போர்வெல்
3. ஸ்கூட்டி
4. காய்கறி வாங்கி வராத கணவர் மீதான சலிப்பு
5. போனை எடுக்காத கணவர் மீதான சலிப்பு

இந்த எண்ணங்கள் புஷ்பாவிற்கே தெரியாமல் சில அழுத்த முடிச்சுகளை அவளுக்குள் ஏற்படுத்திச் சென்றிருக்கின்றன.

ப்ரஸர் குக்கரில் அழுத்தம் ஏற்பட்டால் அது வால்வைத் தூக்கிக் கொண்டு வெளியேறி ஆக வேண்டும்.   அப்படி வெளியேற வழி இல்லாவிட்டால் குக்கர் 
வெடித்துவிடும். அதே போலதான் மனதில் ஏற்படும் இந்த அழுத்த முடிச்சுகளும்  வெளியேறியே ஆக வேண்டும்.  இல்லா விட்டால் அது அவளுக்கு சுகர், பிரஸர், ஹார்ட் அட்டாக், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை உருவாக்கும்.

சரி.  இந்த அழுத்த முடிச்சுக்கள் எப்படி வெளியேறி வாழ்க்கையை நரகமாய் மாற்றுகின்றன எனப் பார்ப்போம்.

அதற்கு புஷ்பாவின் கணவன் மோகனின் எண்ண ஓட்டத்தையும் சற்றுக் கவனிக்க வேண்டும்.

மோகன் அன்று காலை சீக்கிரமாகவே புறப்பட்டு (புஷ்பாவும், பக்கத்து வீட்டு ரோஸியும் பேசிக்கொண்ட அதே நாள்) தன் நெருங்கிய நண்பன் சங்கரின் திருமணத்திற்குச் சென்றிருந்தான்.  அதனால் தனக்கு காலை உணவு தேவையில்லை எனவும் மதிய உணவுக்கு வருவதாகவும் சொல்லிச் சென்றிருந்தான்.

சங்கரின் தந்தையார் மிகப்பெரிய செல்வந்தர்.  பெரிய தொழிலதிபர்.  தன் ஒரே மகனின் திருமணத்தை வெகு விமர்சையாகக் கொண்டாடத் தீர்மானித்து மிக ஆடம்பரமாகத் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.

நகரிலேயே மிகப்பெரிய, முழுவதும் குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம் அது.  மிகப் பெரிய செல்வந்தர்கள் மட்டுமே அங்கு திருமணத்தை நடத்த இயலும்.

மோகன் மண்டபத்தில் நுழையும்போதே அவன் தாழ்வுமனப்பான்மை தலைதூக்கியது.  அங்கு வந்திருந்தவர்களிலேயே மிக மிக சாதாரணமான உடையணிந்து வந்தது மோகன்தான். மண்டபத்தில் நுழைந்து நூற்றுக்கணக்கான ஆடம்பர கார்கள் நின்றிருந்த பார்க்கிங்கில் தன் இரு சக்கர வாகனத்தை பார்க் செய்தான். மண்டபத்தின் உள் நுழைவாயிலில் ஒயிட் கலரில் ரிப்பன் சுற்றப்பட்டு ஒரு பென்ஸ் கார் நின்றிருந்தது.  மாப்பிள்ளைக்கான சீர் வரிசை அது.

மோகனின் மனதில், “சே… கடசி பென்ச்ல உக்காந்து டீச்சரை சைட் அடிச்சுட்டு கலாய்ச்சுட்டு இருந்த சங்கருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா? படிக்கும்போதே எல்லா கெட்ட பழக்கங்களும் அவனுக்கு உண்டு.  ஒழுங்காப் படிக்க மாட்டான்.  ஏகப்பட்ட அரியர்ஸ்.  அவனுக்கு பென்ஸ் கார் வரதட்சிணை.   ஒழுங்கா படிச்சு சின்சியரா இருந்த எனக்கு ஒரு பைக்குக்கு கூட வழியில்ல.  சே.  நான் ஒரு அதிஷ்டக்கட்டை” என எண்ண ஓட்டங்கள் நிகழ்ந்தது. உள்ளே சென்று மணமக்களைப் பார்த்தான். அவ்வளவுதான்.  பயங்கர அதிர்ச்சி. 

“அட…. இந்த மூஞ்சிக்கு இப்படி ஒரு தேவதையா?”

சங்கர் ஒன்றும் பெரிய அழகனல்ல.   அவன் சுமார் மூஞ்சி சங்கர்தான். ஆனால் அவனுக்கு தேவதை போல, செதுக்கி வைத்த சிலை போல, பளிங்கு போல அழகு மனைவி.

“பொண்ணுக்கு நூறு பவுன் நக…..ஒரு பங்களா வீடு……ஒரு கார் சீதனமா கொடுத்திருக்காங்க”  

ஒரு உறவினர் பெண் யாரிடத்திலோ சொல்லிக் கொண்டிருந்தது இவன் காதில் விழந்தது. சம்பிரதாயமாய் கை குலுக்கி வாழ்த்துச் சொல்லி, சாப்பிட்டு விட்டு வெளியேறினான்.

“நூறு பவுன் நகை, பங்களா வீடு, கார்…..சே…. சங்கருக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.   எனக்கும் ஒண்ணு வந்து வாச்சிருக்கே.  ஒரு பைக் வாங்கித் தரக்கூட வக்கில்லே” அவன் மனம் புலம்பிக்கொண்டே இருந்தது.  பல அழுத்த முடிச்சுகள் அவனை அறியாமலேயே விழுந்தன. அலுவலகம் சென்று வேலைகளை முடித்துக்கொண்டு மதிய உணவுக்கு வீடு திரும்பினான்.

அவனுக்கும் மனைவிக்குமான உரையாடல்.

”என்ன சமையல்?”

”ம்…வத்தக் குழம்பும், வடகமும்.”

”ஏன்.  பொரியல் செய்யலையா?”

”ஆமா…..அது ஒண்ணுதான் குறச்சல்.  இத்தன துணிய துவச்சு முடிச்சு இடுப்பெலும்பு கழண்டுபோய் வலியோட இத செஞ்சதே எச்சு.”

”சே….ஒரு பொரியலோட சாப்பிடக் கூட கொடுப்பினை இல்ல.  எல்லாம் என் தலையெழுத்து.”

”ஆமா….நேத்தைக்கு காய்கறி வாங்கிட்டு வரச்சொல்லி தலதலய அடிச்சுகிட்டனே…..அப்ப  தெரியலயா?   வாங்கிட்டு வராம உட்டுட்டு இப்ப வாய்க்கு வக்கணையா பொரியல் கேக்குதோ?”

”இந்த வீட்டுக்காக நாய் மாதிரி உழச்சு கொட்டுறேன்.   வாய்க்கு ருசியா ஒரு சாப்பாடு கூட கிடைக்க மாட்டேங்குது.”

”நான் மட்டும் என்ன….பேய் மாதிரி வேல செய்யுறேன்.  என்னிக்கு உங்களுக்கு கழுத்த நீட்டுனேனோ அன்னிக்கே என்னப் புடிச்சுது சனி.”

”பேய் மாதிரி என்ன…..பேயேதான்…. உன் மூஞ்சிய கண்ணாடில பாத்ததேயில்லயா?”

”கல்யாணம் ஆன புதுசுல தேவதையாட்டம் இருக்கேன்னு குட்டி போட்ட பூன மாதிரி சுத்துனீங்களே…..அப்பத் தெரியலயா பேய்னு…..நான் பேய்னா நீங்க பிசாசு.”

”யாருடி பிசாசு.  நீ பேய்.  உங்க அம்மா பேய்….உங்க அப்பா பேய்….”

”அநாவசியமா என் குடும்பத்த இழுக்காதீங்க”

”அப்படிதான்டி பேசுவேன்… என்ன பண்ணுவ?” 

…………

இப்படியாக இன்னும் சண்டை வளர்ந்து கொண்டே செல்லும்.

இதில் பிரச்சனை சமையலோ, பொரியலோ அல்ல. வாஷிங் மெஷின், ஸகூட்டி, போர்வெல், 100 பவுன் நகை, கார், பங்களா இப்படியாக இருவரின் மனதிலும் ஓடிய ஓப்பீட்டு எண்ணங்கள் ஏற்படுத்திய அழுத்த முடிச்சுகளின் வெளியேற்றங்களே இந்தச் சண்டைகள். இவை வாழ்வையே நரகமாக்கி விடும்.  இப்படித்தான் 98 சதவிகித தம்பதியர்களின் வாழ்க்கை நரகமாக உள்ளது.  இதைப் பார்த்து வளரும் குழந்தைகளும், இப்படித்தான் குடும்பம் நடத்தவேண்டும் போலும் எனப் புரிந்து கொண்டு அதையே தங்கள் வாழ்க்கைத் துணையிடமும் தொடர்கிறார்கள்.  

இது தொட்டுத் தொடரும் ஒரு பாரம்பரியம்.

இதிலிருந்து வெளிவந்து அமைதியான, ஆனந்தமான ஒரு வாழ்க்கையை நீங்கள் வாழ விரும்பினால் மனதோடு விளையாடுவதைத் தவிர வேறு வழியேயில்லை.

எனவே மனதோடு விளையாடத் தொடங்குவோம்.

#ராகவேந்தர்

நடைமுறை வாழ்வில் விளம்பரங்களின் தாக்கம்

அம்மா, இன்னிக்கு எங்க ஸ்கூல்ல இந்தியாவின் ரொம்பப்பெரிய சயின்டிஸ்ட்லாம் வர்றாங்க. அவங்கல நாந்தான் இண்டர்வியூ பண்றேன். ஏன்னா…..

உன்னோட ப்ராஜக்ட்தான் பெஸ்டா இருந்திருக்கும்….

என் ரோகன்.   இன்னிக்கு இவன் இண்டர்வியூ பண்றான். நாளைக்கு இவன எல்லோரும் இண்டர்வியூ பண்ணணும்.  

அதுக்கு ஹார்லிக்ஸ் குடுங்க ன்னு ஒரு விளம்பரம்.

பார்ப்பதற்கு இதுல என்ன தப்பு?  இது எல்லா அம்மாக்களும் நினைக்கறதுதான…… என்பது போல இருந்தாலும் இது போன்ற விளம்பரங்கள் மிக மிக ஆபத்தானவை.

நம்பர் 1 பைத்தியத்தை உங்களில் விதைப்பது மட்டுமின்றி, உங்களிடமிருந்து உங்கள் குழந்தைக்கும் அந்தப் பைத்திய மனநிலையை தொற்றிக் கொள்ளச் செய்து, குழந்தையைப் பந்தயக்குதிரையாக்கும் மட்டமான வியாபாரம்.

உங்களிடமுள்ள “நான்” என்ற அகங்காரம் தான் இவர்களின் வெற்றி. அம்மாக்களிடமுள்ள இந்த அகங்காரத்தை அவர்கள் மிகச் சரியாய்ப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

எல்லாவற்றிலும் நம்பர் 1 இடத்தை பெற வேண்டும் என்ற வெறி ஒரு குழந்தையின் மனதில் தொற்றிக்கொண்டவுடனே அது சக மாணவர்களை எதிரியாகப் பார்க்கத் தொடங்குகிறது.  

பொறாமை, கோபம், வஞ்சம் ஆகிய குணங்கள் குழந்தையைத் தொற்றிக் கொள்கின்றன.  இது மிக மிக ஆபத்தான மன நோய்.  குழந்தை மெல்ல மெல்ல தன் வாழ்க்கையை இழந்து விடுகிறது.

குழந்தை குழந்தையாக இருக்கட்டும்.  அது யாராகவும் ஆக வேண்டாம்.  இந்த வாழ்க்கை என்பது உணர்வு பூர்வமாய் வாழ்வதற்கே.

எல்லோரும் பாராட்டக்கூடிய ஒரு நிலைக்கு உயர வேண்டும் என்பதே இந்த உலகில் மிகப்பெரும்பான்மையான மனிதர்களுக்கு உள்ள ஒரு மனோ வியாதி.

அந்த வியாதி உங்கள் வாழ்க்கையை வாழ விடாது. உங்களை இயந்திரமாக மாற்றிவிடும் தன்மை கொண்டது.

தயவு செய்து உங்கள் நடைப்பிணமான உயிர்ப்பற்ற வாழ்க்கையை உங்கள் குழந்தைகளுக்குள் ஊடுருவச் செய்துவிடாதீர்கள்.

குழந்தைகளை இயல்பாய் விட்டுவிட்டாலே அவர்கள் எதுவாக ஆகவேண்டுமோ அதுவாக ஆகிவிடுவர்.
நீ நீயாக இரு.  யாரும் உன்னை கொண்டாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீ விருப்பபட்டு எதை செய்கிறாயோ அதைச் செய் என்பதே குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தரவேண்டியது.

நாளைக்கு எல்லோரும் உன்னை இண்டர்வியூ எடுக்கணும் எனச் சொல்லித் தருவதெல்லாம் அவர்களைப் பரபரப்பாக்கி வாழ்க்கையை வாழவிடாமல் செய்து, அவர்களுக்குள் உள்ள ஆன்மாவைக் கொலை செய்வதாகும்.

#ராகவேந்தர்.

Wednesday, February 04, 2015

இஞ்சி சாறு செய்யும் முறை


இரண்டு அங்குல நீளம் உள்ள இஞ்சியை தோலை நீக்கி கழுவி ஆறிய வெண்ணீர் விட்டு அரைக்கவும் பட்டு போல் வேண்டாம் மிக்சியின் பஸ்ஸில் இரண்டு முன்று சுற்று சுற்றினால் போதும். 


அதை எடுத்து டீ வடிக்கட்டும் ஸ்ட்ரெயினரில் தேங்காய் பால் எடுப்பது போல் பிழியவும். அந்த சக்கையை தூர போட வேண்டாம் ஒரு சின்ன கண்டெயினரில் வைத்தால் இரண்டு முன்று நாட்களுக்கு டீ போட உதவும். மிக்சியில் அரைக்கனும் என்றில்லை கேரட் துருவும் கிரேட்டரிலும் செதுக்கி பிழியலாம். 

பிழிந்த சாறை பத்து நிமிடம் அப்படியே வைக்கவும், பத்து நிமிடம் கழித்து மேலோடு இருக்கும் சாற்றை மட்டும் வேறு டம்ளரில் தெளிந்தார் போல ஊற்றவும் வடிக்கட்டியதும் அடியில் வெள்ளை நிற படிவம் படிந்த்து இருக்கும் அதை பயன் படுத்த கூடாது அது நஞ்சு.  

அவ்வளவுதான் எடுத்து வைத்துள்ள சாற்றில் தேன் கலந்து  கொடுக்கலாம்

Thanks to: http://samaiyalattakaasam.blogspot.in/

Related Posts Plugin for WordPress, Blogger...