Search This Blog

Saturday, February 11, 2012

அறிவாளியை உருவாக்க விந்தணுவால் முடியுமா?



விந்தணு அணுக்கள் எனப்படும் 23 நிறமூர்த்தங்களை (Chromosomes) கொண்ட விந்து ஆண்களின் விதைகளில் உருவாக்கப்படுகின்றன. இதில் ஹார்மோன்களின் தூண்டல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  பெண்ணின் கருமுட்டை 23 நிறமூர்த்தங்களையும் ஆணின் விந்து 23 நிறமூர்த்தங்களையும் கருவூட்டலின் போது சேர்ந்து 23 சோடி நிறமூர்த்தங்களாக உருவாகின்றன.



இந்த நிறமூர்த்தங்களில் டி என் ஏ என்ற பெரிய சங்கிலி மூலக்கூறுகள் உண்டு. அவற்றில் ஜீன்கள் எனப்படும் பகுதிகள் உண்டு. அந்த ஜீன்களே நமது இயல்புகளுக்கு காரணம்.



ஒரு ஆணிடம் இருந்து இயற்கையாக தோன்று விந்தணுக்களில் உள்ள நிறமூர்த்தங்கள் ஒருபோதும் அவர்களில் உள்ள உடலில் உள்ளது போன்று அமைவதில்லை. காரணம், விந்தணு தோன்றும் நிகழ்வின் போது cross over என்ற செயற்பாட்டின் மூலம் ஜீன்கள் ஒரு நிறமூர்த்தத்தில் இருந்து அடுத்ததற்கு பகுதியாக பரிமாறப்படுவதன் மூலம் தனித்துவமான விந்துகள் உருவாகின்றன.



ஆக ஒருவரின் வாழ்நாளில் அவர் சார்ந்த இயல்புகள் அப்படியே விந்தணுவில் அடக்கப்படுவதில்லை. மாறல்கள் நிகழ்கின்றன. அதுவும் இல்லாமல் ஒரு ஆணின் ஜீன் தனது இயல்பை வெளிப்படுத்த வேண்டுமானால் பெண்ணின் அதே நிலைக்குரிய ஜீன் ஜோடியின் தன்மையும் அதற்கு இணங்கியாக வேண்டும். சில சந்தர்ப்பங்களில் பெண் ஆதிக்கமுள்ள ஜீனையும் அதேவேளை அதே சோடிக்குரிய ஆதிக்கமற்ற ஜீனை ஆண் கொண்டிருந்தாலும் பெண்ணின் இயல்பே வெளிப்படும். மேலும் மனிதனில் குறிப்பிட்ட பல இயல்புகள் பல ஜீன்களின் ஒருமித்த வெளிப்பாட்டாலும் உருவாகின்றன (மதிநுட்பம் போன்றவை...)



ஆக விந்துகளை மட்டும் வைத்துக் கொண்டு இயல்புகளை பூரணமாக தீர்மானிக்க முடியாது.  முட்டை + விந்து ஜீன்கள் அப்படியே பொருந்தினாலும்  ஜீன்கள் சரியாக வெளிப்பட உடல் வளரும் சூழல் சரியாக அமைய வேண்டும். சரியான சூழலில் வளராவிட்டால் ஜீன்களின் வெளிப்படுத்தலில் தவறுகள் நிகழலாம். சூழல் என்பது நாம் வாழும் பூமியின் பெளதீகச் சூழல், இரசாயன, சமூகச் சூழல்,  உடலினுள் உள்ள சூழல் என்று பல.



எனினும் மூளைத் திறமை அல்லது திறனை எடுத்து கையாண்டால் அதைத் தீர்மானிப்பது ஜீன்கள் மட்டுமல்ல; சூழலும் தீர்மானிக்கிறது. அந்த வகையில், எல்லாம் ஜீன் அளவில் சரியாக அமைந்து சூழல் சரியான சூழல் அமையவில்லை என்றால் திறமையான ஜீன் சரியாக வெளிப்பட மாட்டாது. எல்லாம் 100% சரியாக அமைய வேண்டின் இயற்கையின் தேர்வும், சூழலும் சரியாக அமைய வேண்டும்.



ஒரு குழந்தையை இவ்வாறு செயற்கையான தேர்வு முறையில் உருவாக்க ஆகும் செலவு பல மடங்கு. அந்தச் செலவை மீதப்படுத்தி இயற்கை வழியில் குழந்தையை உருவாக்கினால் அந்தப் பணம் குழந்தைக்கு நல்ல உணவு உட்பட்ட சூழலை ஏற்படுத்தி இயல்புகள் சரிவர வெளிப்படுத்த வகை செய்ய முடியும்.


அழகு, கல்வி அறிவு, விளையாட்டுத் திறன், கணணி அறிவு இதெல்லாம் வெறும் ஜீன்களால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை; ஜீன்களின் வெளிப்பாட்டை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இயற்கைச் சூழலே இன்றும் இருக்கிறது



சுருக்கமாச் சொன்னால், நல்ல விந்து, நல்ல கருமுட்டை, நல்ல சூழல் மற்றும் முயற்சி இருந்தால் அறிவாளியாக வாய்ப்பு உள்ளது. 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...